சவுதி அரேபியாவில் அரபு நாடுகளின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஒரு வார காலமாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போர் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை அடுத்து சவுதி அரேபியாவில் அரபு நாடுகளின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு எனும் இந்த அமைப்பு ஐநா சபைக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர் நாடுகள் கொண்ட ஒரு அமைப்பாகும். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் குரலாக இந்த அமைப்பு உள்ளது. இந்த கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை சவுதி அரேபியா ஏற்றுள்ளது. தற்போது இந்நாடு அனைத்து உறுப்பினர் நாடுகளையும் சவுதி அரேபியாவில் உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது காசா பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விவாதிக்க இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. காசா மக்கள் படும் துயரத்திற்கு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா சமீப காலங்களில் இஸ்ரேலுடன் சமூக உறவுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தது. எனினும் காசா போருக்கு பிறகு அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திக் கொண்டது.