இஸ்ரேல் ராணுவத்தினர் ஹமாஸ் நாடாளுமன்றத்தை கைப்பற்றியதாக நேற்று செய்தி வெளியானது. தற்போது, காசா நகரில் உள்ள மருத்துவமனைகளை இஸ்ரேல் ராணுவத்தினர் முற்றுகையிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் உள்ள மருத்துவமனைகளை ஹமாஸ் இயக்கத்தினர் ஆயுத கிடங்காக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் மருத்துவமனைகளில் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனைகள் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வந்த இஸ்ரேல் ராணுவத்தினர், அல் ஷீபா மருத்துவமனையை பீரங்கி வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளனர். இதனால், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், ஊழியர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 2300 பேர் தீவிர பாதிப்படைந்துள்ளனர். இங்கு மின்சார வசதி இல்லாததால், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளும் கிடைக்கவில்லை. மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. ஜெனரேட்டர்கள் இயங்கவில்லை என்பதால், இன்குபேட்டர்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் செயல் இழந்து, பல உயிரிழப்புகள் நேர்கின்றன. மேலும், அழுகும் உடல்களுக்கு மத்தியில் நோயாளிகள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவமனை முற்றுகையில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதற்கு, அமெரிக்க அதிபரே காரணம் என ஹமாஸ் இயக்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.