மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் நிதி விடுவிக்கவில்லை என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2019 ஜன.,27ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடை ரூ.1464 கோடியில் இருந்து, மேலும் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதில் 82 சதவீதம் நிதி வழங்க ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் ஒப்புதல் வழங்கியது. ஆனால் தற்போது வரை கட்டுமானங்கள் துவங்காமல் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த ஆர்.பாண்டியராஜா என்பவர் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு தகவலறியும் உரிமை சட்டம் மூலமாக எய்ம்ஸ் தொடர்பான கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு அமைச்சகம், மொத்த திட்ட தொகை ரூ.1977.8 கோடி என்றும், மொத்த நிதியில் ஜைக்கா 82 சதவீதமும், மத்திய அரசு 18 சதவீதமும் வழங்க உள்ளது. அதன் அடிப்படையில் ஜைக்கா ரூ.1621.8 கோடி கடன் வழங்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதுவரை ஜைக்கா நிறுவனம் மதுரை எய்ம்ஸ் நிதியை விடுவிக்கவில்லை என்று பதிலளித்துள்ளது.