தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. இந்த திரைப்படங்கள் குறித்து சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பின்படி, மாதந்தோறும் அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை " சிறார் திரைப்பட விழா" என்ற பெயரில் தயாரித்துள்ளது. இது தொடர்பான கீழ் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகல்வி துறை வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிட வேண்டும். இவை அதற்கான குறிப்பிட்ட பாடவேளையில் திரையிடவேண்டும். படத்தை திரையிடுவதற்கு முன்பும், பின்பும் அதுதொடர்பாக மாணவர்களிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும்.
மேலும், எந்த படங்களை திரையிடுவது என்பது குறித்த விவரங்களை கல்வித்துறை அனுப்பும். திரைப்படங்கள் குறித்த விமர்சனத்தை மாணவர்கள் எழுதி தரவேண்டியது கட்டாயம். பள்ளிகளில் சிறப்பான இடம்பிடிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் வாய்ப்பு வழங்கப்படும். இதில் சிறப்பாக விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்வி சுற்றுலாவும் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கபட்டுள்ளது.