புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் இன்று பதவியேற்றார். இவர், முதியோர் உதவித்தொகை கோப்பில் முதல் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 ஆண்டுகளாக புதுவைக்கு பொறுப்பு ஆளுநர்களே பதவி வகித்து வந்த நிலையில், இந்த நியமனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைலாஷ்நாதன் குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி. குஜராத் முதல்வர் அலுவலகத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பிரதமர் மோடிக்கு நெருக்கமான இவரது நியமனம், புதுச்சேரியில் பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்க வழிவகுக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பதவியேற்பு விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.