காவிரியில் கழிவுநீர் கலப்பதை கர்நாடகா தடுத்து நிறுத்த வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடக அரசுக்கு, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவை காட்டிலும், இது 484 டி.எம்.சி கூடுதல். நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.
இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.