சீக்கியர்களுக்கான தனி நாடு கோரிக்கையை முன்வைத்து காலிஸ்தான் அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் கமாண்டோ படைப் பிரிவு தலைவர் - பரம்ஜித் சிங் பஞ்ச்வார் என்று அழைக்கப்படும் மாலிக் சர்தார் சிங், பாகிஸ்தானின் லாகூரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் நேற்று காலை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவால் தேடப்படும் முக்கிய தீவிரவாதியாக, பரம்ஜித் அறிவிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வந்த நிலையில், பாகிஸ்தானில், அவரது வீட்டின் அருகே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் நடைபயிற்சி சென்றபோது, அவரது பாதுகாவலர் துப்பாக்கி ஏந்திய நிலையில் அவருடன் இருந்தார். இந்நிலையில், இந்த தாக்குதலில் பாதுகாவலரும் காயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.














