நேபாளத்தின் பிரதமராக கே.பி சர்மா ஒலி மூன்றாவது முறையாக பதவி ஏற்றார்.
நேபாளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் சிபிஎன் மாவோயிஸ்ட் கட்சி தலைவர் புஷ்பகமல் தஹல் பிரசந்தா, கே பி சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அதன் பின் அந்த கூட்டணி அரசின் ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றது. இருப்பினும் நேபாள காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசந்தா இருந்து வந்தார். அதன்பின் ஏற்பட்ட கூட்டணி மாற்றத்தால் பிரதமர் பிரசந்தா நான்கு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்றார்.
இதற்கிடையே நேபாளத்தில் கடந்த 12 ஆம் தேதி ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கூறினார் பிரசந்தா. இதில் அவர் தோல்வியடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எதிராக 194 வாக்குகள் பதிவாகின. இதனையடுத்து நேபாளின் புதிய பிரதமராக சர்மா ஒலி நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து இன்று காலை ஜனாதிபதி ராம் சந்திரா முன்னிலையில் சர்மா ஒலி பிரதமராக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதன் மூலமாக மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்றுள்ளார்.