பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு 13-வது தவணை தொகை விடுவிப்புக்கு வங்கிக்கணக்குடன் ஆதார் இணைக்க வேளாண்மை-உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி’’ திட்டமானது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இணைந்த பயனாளிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்து 13-வது தவணை பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பு அவசியம் என வேளாண்மை-உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.
பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த (e-KYC), வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு மட்டுமே இத்தவணைத் தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.














