நடப்பு நிதயாண்டில், கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில், நிறுவனத்தின் லாபம் 2112.5 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே, கடந்த வருட செப்டம்பர் மாதத்தில், நிறுவனத்தின் லாபம் 486.9 கோடி ரூபாயாக இருந்தது. எனவே, வருடாந்திர அடிப்படையில், நிறுவனத்தின் லாபம் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.
மேலும், கடத்த செப்டம்பர் மாதத்தில், நிறுவனத்தின் வருவாய் 29942.5 கோடி ரூபாயாக பதிவானது. கடந்த வருட செப்டம்பர் மாதத்தில் நிறுவனத்தின் வருவாய் 20550.9 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 517395 ஆகும். அதில் உள்நாட்டு வாகன விற்பனை 454200 ஆகவும், வெளிநாட்டு ஏற்றுமதி வாகன விற்பனை 63195 ஆகவும் பதிவாகியுள்ளது.
மின்னணு உதிரி பாகங்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த நிதி ஆண்டில், வாகன விற்பனையில் தாமதங்கள் ஏற்பட்டது. அந்த நிலை தற்போது மாற்றம் அடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் மின்னணு உதிரி பாகங்கள் பற்றாக்குறையால் சுமார் 35000 வாகனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், 379541 வாகனங்கள் மட்டுமே விற்பனையாயின. இந்த நிலை, தற்போது நீங்கி, விற்பனையில் வளர்ச்சி காணப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.