உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
போர் காரணமாக உக்ரைனில் படித்து வந்த மாணவர்கள் இந்தியா திரும்பிய நிலையில் அவர்களுக்கு இந்திய மருத்துவ கல்லூரிகளிலேயே தங்களது படிப்பை தொடர அனுமதிக்க கோரி மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையின் போது மாணவர் தரப்பில், மனிதாபிமான அடிப்படையில் நான்காம், ஐந்தாம், ஆறாம் ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு இந்தியாவிலேயே நாம் வாய்ப்பு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு தரப்பில், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் மருத்துவப் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது. இந்திய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள் அதற்கு இடம் தராது. இந்தியாவில் படிப்பதற்கு இடம் கிடைக்காததால் தான் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றார்கள். எனவே நமது நோயாளிகளை இவர்கள் கையாள்வதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். வழக்கு அடுத்த வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.