மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், மெட்டா நிறுவனமும் இணைந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மொழி மாடலான லாமா தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
'லார்ஜ் லாங்குவேஜ் மாடல் மெட்டா ஏஐ' என்பதன் சுருக்கமே லாமா என்று அழைக்கப்படுகிறது. இது சாட் ஜிபிடி போன்று நேரடியாக மனிதர்களுடன் உரையாடாது. எனினும், ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் துணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம், சொற்றொடர்களை உருவாக்க முடியும்; கணிதப் புதிர்களுக்கு தீர்வு காண முடியும்; புரோட்டீன் அமைப்புகளை கணிக்க முடியும்; கேள்விகளை வாசிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, சில ஆராய்ச்சி சார்ந்த உதவிகளை லாமா செய்யும் என்று சொல்லப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம் வெவ்வேறு அளவீடுகளில் லாமாவை கொண்டு வந்துள்ளது. அவற்றுள், லாமா 7பி, 1 ட்ரில்லியன் டோக்கன்கள் பயிற்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.