வேலூர் மாநகராட்சியில் செயற்கை கோள் இணைப்புடன் கூடிய நடமாடும் நவீன கட்டுப்பாட்டு அறை வாகனத்தை டிஜிபி சைலேந்திரபாபு பெற்றுக்கொண்டார்.
வேலூர் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.52 லட்சம் மதிப்பில் தமிழகத்தில் முதல் முறையாக அதிநவீன தொழில் நுட்பத்துடன், செயற்கை கோள் இணைப்புடன் கூடிய சிசிடிவி மொபைல் கட்டுப்பாட்டு வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் மாநகராட்சி, மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்திருக்கும். இவ்வாகனத்தில் உள்ள கேமராக்கள் மூலம் 2 கி.மீ தூரம் வரை கண்காணிக்க முடியும். இதனை டிஜிபி சைலேந்திரபாபு பெற்றுக்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பல தொழில்நுட்ப வாகனங்கள் இருந்தாலும் இது அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் வாகனம் ஆகும். இது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மட்டுமின்றி சென்னை தலைமை கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் கண்காணிக்கப்படும் என்றார். இதையடுத்து நடமாடும் நவீன கட்டுப்பாட்டு மைய வாகனத்தை வேலூர் மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.