சென்னை மாநகராட்சி சார்பில் ஒரேநாளில் 2 ஆயிரத்து 919 தெருக்களில் தீவிர கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மேயர் பிரியா தலைமையில் கடந்த 11-ம்தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 12-ம் தேதி ஒரே நாளில் மட்டும் மழைநீர் வடிகாலில் 250 கிமீ நீளத்துக்கு கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டது. 239 கிமீ நீளத்துக்கு கொசு ஒழிப்பு புகை பரப்பியும், நீர்நிலைகளில் 58.34 கிமீ நீளத்துக்கு கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், 2 ஆயிரத்து 919 தெருக்களில் வாகனங்கள் மற்றும் கையினால் இயக்கும் இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்புப் புகை பரப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டன. 16 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி நீர்நிலைகளுக்கு அனுப்பியதாக அதில் கூறப்பட்டுள்ளது.