………………………………..சுரும்பு உண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்
பறம்பிற் கோமான் பாரி………………..”
வண்டுகள் உண்ணுமாறு தேன் வழங்கும் நறுமண மலர்களை உடைய நாகமரம் நிறைந்த வழிப்பாதையில், பற்றிப் படர்வதற்குக் கொழுகொம்பு இல்லாமல் தவித்த முல்லைக் கொடிக்குத் தன் பெரிய தேரினைக் கொடுத்தவனும், எண்ணற்ற வெள்ளை அருவிகள் மலைச் சரிவிலிருந்து விழும் பறம்பு மலையின் மன்னனுமான பாரியின் புகழை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படை (87-91) யில் மிக அழகாக பாடி இருக்கிறார். பாரியை பாடாத புலவர்களே இல்லை. பாண்டிய நாட்டு கபிலர், பெண்பாற் புலவர் ஒளவையர், பாரியின் புதல்விகள் அங்கவை,சங்கவை, ஆளுடைய நம்பி என்று போற்றப்படும் சுந்தரர் தனது திருத்தொண்டகை பதிகத்தில் பாரியைப் பற்றி பாடி இருக்கிறார்,
தென் இந்தியாவை ஆண்ட அரசர்களில் முக்கியமானவர்கள் சேர,சோழ, பாண்டியர்கள். இந்த சேர சோழ பாண்டியர்களுக்கு அடங்கிய சிற்றரசுகள் பல இருந்தன. அது போன்ற கட்டுக்குள் இருந்த சிற்றரசுகளைக் கொண்டே சேர சோழ பாண்டியர்கள் பேரரசுகளாக திகழ்ந்தனர். ஆனால், அவர்களுக்கு சவால் விடுத்தவன் வள்ளல் பாரி. அவன் மூவேந்தர்களைக் காட்டிலும், சிறப்பாக ஆட்சி செய்தான். கடைச்சங்க காலத்தில் ( கிபி இரண்டாம் நூற்றாண்டு) வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. பறம்பு நாடு இதுவே வள்ளல் பாரி ஆண்ட நாட்டின் பெயர். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே உள்ள பிரான் மலையே அன்றைய பறம்பு மலை.
முந்நூறு ஊர்களைக் கொண்ட மலை நாடுதான் இந்த பறம்பு மலை. சுனைகளும்,தேனடைகளும், பலா, நாவல், மூங்கில் மரங்களும் சூழ பல வளங்களைக் கொண்டு இருந்த நாடு பறம்பு நாடு. தன்னை நாடி வரும், பறவைகளுக்கு தன்னுடைய பழங்களைக் கொடுத்து சந்தோஷிக்கும் பழ மரம் போல, தன்னை நாடி வரும் அனைவருக்கும் கேட்டவற்றையும் கொடுத்தான், கேட்காத போதும் அள்ளிக் கொடுத்தான் வள்ளல் பாரி. புலவர்கள் மற்றும் பாணர்களுக்கு " போதும்! போதும் " என சொல்லுமளவுக்கு பரிசில்களை வழங்கி சிறப்பித்தான். அவனது ஆட்சி சிறப்பு, குணத்தின் மாண்பு இவற்றை எல்லாம், பாரியைப் பார்த்துவிட்டு மூவேந்தர்களைக் காணச் சென்ற புலவர்கள் அனைவரும், ஒரே மாதிரி புகழ்ந்து பேச, மூவேந்தர்களும் பொறாமைத் தீயில் வேகத் தொடங்கினர். பரிசில்களை சுமக்க மாட்டாமல் சுமந்து கொண்டு மூவேந்தர்களை காணச் சென்ற புலவர்களுக்கு, சற்று ஏமாற்றமே மிஞ்சியது. தங்கள் ஏமாற்றத்தை தமிழ்ச் சொல்லெடுத்து அழகாய் சுட்டிக்காட்ட, எரியும் தணலில் எண்ணெய் விட்டது போன்ற சூழல் மூவேந்தர்களிடையே உருவானது.
இப்படி பாரியின் புகழ் கேட்ட, கபிலர் பாண்டிய நாட்டில் இருந்து பறம்பு நாடு செல்ல ஆசைப்பட்டார். அவரது ஆசையை, வலியுறுத்தும் வகையில், பாரியின் தூதுவன் ஒருவன், புலவர் கபிலரைத் தேடி வந்து, அவரை வணங்கி, தங்களது பறம்பு நாட்டிற்கு கபிலன் வந்து சிறப்பிக்கும்படி வள்ளல் பாரி வேண்டியதை எடுத்துரைக்க, கபிலன் பறம்பு நாடு நோக்கி பயணப்படுகிறார். அவ்வப்போது சென்று பாரியைச் சந்தித்து, தமிழால் வாதிட்டு, மலை நாவல்,தேன், தினை உண்டு, அவர்களிருவது நட்பும் தேன் நெல்லியாய் தித்தித்தது.
பாரியின் புகழுக்கு மகுடம் வைத்தது போன்று, ஒரு நிகழ்வு நடந்தது. ஒருமுறை, காட்டினூடே, தேரில் வள்ளல் பயணிக்கிறான். அவனது நாட்டின் இயற்கை அழகில் மனதை பறிகொடுத்து, ரசித்துக் கொண்டே சென்றவனின் கண்களில், அழகிய முல்லைக் கொடி ஒன்று, சூல் கொண்ட இளைய பெண் போல், அதிக மொட்டுக்களோடு, தலை சாய்ந்து, பற்றுக் கோல் இல்லாமல் தரைப் புழுதியில் புரண்டபடி இருப்பதைக் கண்ட பாரியின், மனம் வேதனை அடைந்தது. உடன் தேரை நிறுத்தி, அந்த முல்லைக்கொடியை தேரில் ஏற்றிவிட்டு அழகு பார்த்த, வேளிர் வேந்தன் வெற்றுக் கால்களைக் கொண்டு நடந்தே அரண்மனை சென்றான். இதனைக் கேட்ட புலவர்கள், மூவேந்தர்களின் செவிகள் புளித்துப் போகுமளவு பாடித் திளைத்தனர்.
தனது பேரரசோடு இணைக்க பல வகையில் முயற்சி செய்தும் எந்த வகையிலும் அடங்காது இருந்த பாரியை, உறவு கொண்டு அடிமைப்படுத்த எண்ணினான் பாண்டியன். ஏற்கனவே திருமணம் புரிந்து பட்டத்தரசி இருந்த நிலையில் பாண்டியன், பாரியின் மகள்கள் அங்கவை,சங்கவை இருவரையும் மணமுடிக்க ஆவல் கொண்டிருப்பதாக, தூதனுப்ப, அந்தப்புர பதுமைகளாக இருக்க தங்களுக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட, ஆத்திரமானான் பாண்டியன். இதே நிலை சேர சோழ அரசர்களுக்கும் நிகழ்ந்தது. இதனால் கோபம் கொண்ட இவர்கள், ஒன்று சேர்ந்து சதி தீட்டலாயினர். அதன்படி எப்போதும், எதற்கும் ஒன்று சேராத இந்த மூன்று அரசர்கள், பாரியின் மீது போர் தொடுக்க ஒன்று சேர்ந்தனர்.
வளம் நிறைந்த பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டனர். சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போல இது இருந்தது. நாட்கள் மாதங்களாகின. உணவுப் பொருட்கள் கீழிருந்து மேலே செல்ல முடியாத சூழலில் பாரி அடிபணிவான் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால், மலை நாட்டில் இருந்த மக்களோ, பலாச்சுளைகள், வள்ளிக் கிழங்கு, தேன்,தினை,மூங்கிலரிசி போன்றவற்றை உண்டு பசியாற, முற்றுகையினால் பயனில்லாததை உணர்ந்த மூவேந்தர்களும், மீண்டும் சதியாலோசனை செய்ய, அப்போது கபிலர் எழுதிய பாடல் வரிகள் அவர்களை சிந்திக்க வைத்தது. அது என்னவெனில், புறநானூற்றுப் பாடலில் நீங்கள் புலவர்களாக வந்து பாரியிடம் யாசகம் பெற்றால் தன் நாட்டையும் உயிரையுமே கொடையாக அளிப்பான் மாறாக பாரியை வீழ்த்த நினைத்தால் அது நடக்காது என்று பாடியிருந்தார். இந்த பாடல் வரிகளை செயலாக்க உடனடியாக முடிவு செய்தனர்.
பாரி எப்போதும் பாணர்களை வரவேற்று பரிசளிப்பவன் என்ற காரணத்தால், தங்கள் வீரர்கள், சிலரைத் தேர்ந்தெடுத்து, பாணர்கள் போல் வேடமிட்டு, பறம்பு மலைக்கு அனுப்பி வைக்கின்றனர். எப்படி மஹாபாரதப் போரின் போது, அபிமன்யுவை அனைவரும் சூழ்ந்து தங்களது வீரத்தை நிலைநாட்டினார்களோ அது போல, கர்ணனைக் கொல்ல கண்ணன் தர்மத்தை தானம் பெற்றது போல, வீரன் பாரியிடம் வெட்கத்தை விட்டு உயிரைத் தா என்று மூவேந்தர்களும் யாசிக்கிறார்கள். இல்லை என்று சொல்லும் பழக்கம் இல்லாத வள்ளல் பாரியோ, சம்மதம் தெரிவிக்க வள்ளல் பாரியை கொலை செய்து விட்டு மூவேந்தர்களும் வெற்றிக்களிப்பில் கூத்தாட, தமிழன்னையும், தர்ம தேவதையும் தலைகுனிந்தனர்.
தமிழர்களின் குணநலன்களுக்கு தீராபழியை மூவேந்தர்கள் தேடித் கொடுத்தனர். கொலையாளிகளின் பெயர் வரலாற்றில் இடம்பெறவில்லை. ஆனால், கொலையுண்ட பாரியோ, தன் ஆட்சித் திறத்தாலும், வள்ளல் குணத்தாலும் தன் மரணத்திலும், புகழ்க்கொடி நாட்டினான்.