மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய தேசிய பொது இயக்க அட்டை, சென்னை மெட்ரோ ரயில்களில் 2 மாதங்களில் அறிமுகபடுத்தப்பட உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பொது இயக்க அட்டை சேவை மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. இந்த அட்டையானது மெட்ரோ ரயில், பேருந்துகள், சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிட கட்டணம், வங்கி பரிவர்த்தனைகள் போன்றவற்றுக்கு பயன்படும்.
இந்த அட்டையை நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில்களில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்துவது எளிதானது, பாதுகாப்பானது மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு ஏற்றது. இதை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்னும் 2 மாதங்களில் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டு போலவே இது செயல்படும்.
மேலும் இதனை மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் போன்ற மற்ற போக்குவரத்து சேவைகளுக்கும் பயன்படுத்த முடியும் என்று அவர்கள் கூறினர்.














