நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்த வருட தொடக்கத்தில், தனது சந்தாதாரர்களை பெரும் அளவில் இழந்தது. அதனால் நிறுவனத்தின் பங்கு மதிப்பு பெருமளவு சரிவை சந்தித்தது. இந்நிலையில் நிறுவனத்தின் சரிவை ஈடுகட்ட, பல புதிய உத்திகள் கையாளப்பட்டன. அதன் பயனாக, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 14% உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், நெட்பிளிக்ஸ்-ல் 2.4 மில்லியன் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்கள் குறித்து வால் ஸ்ட்ரீட் கணித்ததை விட இரு மடங்கு கூடுதல் எண்ணிக்கை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த வருடத்தின் நான்காம் காலாண்டில், 4.5 மில்லியன் வாடிக்கையாளர்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சம்பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதன் போட்டி நிறுவனமான டிஸ்னி, நெட்பிளிக்ஸ் போன்ற ஒற்றை வர்த்தகம் மட்டுமல்லாது, பிற வர்த்தகங்களிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர லாபத்தை ஒப்பிடுகையில், போட்டி நிறுவனங்களின் குறிப்பிட்ட துறை லாபம் குறைவே என்று கூறப்படுகிறது. அத்துடன், போட்டி நிறுவனங்களுக்கு வரும் மாதங்களில் இழப்பு நேரும்
என்று கணிக்கப்பட்டுள்ளது.
சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நிறுவனத்தின் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 6% உயர்ந்து, 7.9 மில்லியன் டாலர்களாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வரும் நவம்பர் மாதத்தில், நெட்பிளிக்ஸ் நிறுவனம், ஒரு மாதத்திற்கு ஏழு டாலர்கள் என்ற கட்டண அடிப்படையில் புதிய ஒளிபரப்பு திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதனால், நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.