பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டசபை கூட்டத்தில் மக்களை கவரும் பல புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
ஆண்டுதோறும் தமிழக சட்டசபையில் முதல் கூட்டம் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த மாதம் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள் காரணமாக சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது.இதனால் பிப்ரவரி இரண்டாவது வாரம் சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்தான ஆலோசனைகள் ஒவ்வொரு துறை வழியாக நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்,மே மாதங்களில் நடக்கயிருப்பதால் மக்களை கவரும் புதிய புதிய அறிவிப்புகளை பட்ஜெட்டில் இடம்பெற செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்டசபையில் கவர்னர் உரையாற்றுவதற்கு அழைக்கப்படுவாரா? இல்லை சட்டசபையில் கவர்னர் உரை இல்லாமலே சட்டசபை தொடங்குமா என்பது குறித்தான தகவல்கள் சரிவர தெரியவில்லை.