நோய்களை தடுக்க சர்வதேச அளவில் புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் ஏழாவது உலக சுகாதார மாநாடு - 2022 நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், உலகம் எப்போதும் இல்லாத அளவில் கொரோனா பெருந்தொற்றை எதிர் கொண்டது. தற்போதைய போக்குவரத்து, தொழில்நுட்ப முன்னேற்றம் போன்றவற்றால் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை தவிர்க்க இயலாத நிலை உள்ளது.
இதனை தடுக்க மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்புடன் கூடிய புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும். 'ஜூனோசிஸ்' என்பது விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய். ஜூனோடிக் நோய் கிருமிகள், பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணியாக இருக்கலாம். இதுபோன்ற புதிய நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் விலை மக்களால் வாங்க முடியாத அளவில் உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.