சென்னையில் 358 இடங்களில் புதிதாக நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் பிரியா தலைமை தாங்கினார். இதில் நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் கேள்வி நேரத்தின் போது கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னையில் 348 நவீன கழிவறைகள்(இ-டாய்லெட்கள்) கட்டுவதற்கு 4 நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கி பணிகள் நடைபெற்றன. ஆனால் நிர்வாக சீர்கேடு, முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டப்பட்ட சில கழிவறைகளும் சீர்குலைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு மேயர் பிரியா, தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள நவீன கழிவறைகளை சீரமைக்க குறிப்பிட்ட நிறுவனங்களை மீண்டும் அழைத்து, அதனை சரிசெய்ய அறிவுறுத்தியதால் 37 இடங்களில் சீர் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் கழிவறைகள் கட்ட தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 358 இடங்களில் புதிதாக நவீன கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக, மாநகராட்சி முழுவதும் கிடைக்கப்பெறும் இடங்களில் கழிவறை அமைக்கப்பட உள்ளது என்றார்.