வங்கி மோசடி செய்து, இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடியை மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம், இம்மாத தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய 2 வார கால அவகாசம் கோரி, லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனு தாக்கல் செய்துள்ளார்.
தற்போது லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடி, சீரான மனநிலையில் இல்லை என்றும், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தினால் அவர் தற்கொலை செய்ய நேரிடும் என்றும் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. ஆனால், நீதிமன்றம் இதனை ஏற்க மறுத்து, அவரை நாடு கடத்தும் படி தீர்ப்பளித்தது. இந்நிலையில், அவர் நாடு கடத்தப்படாமல் இருப்பதில் பொது நோக்கம் மற்றும் முக்கியத்துவம் உள்ளதாகவும், அதன் பொருட்டு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, 2 வார கால அவகாசம் வேண்டும் எனவும் நீரவ் மோடி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நிராகரிக்கப்பட்டால், அவர் மனித உரிமை மன்றத்தில் வழக்கு தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நீரவ் மோடி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட மேலும் பல ஆண்டுகளாகும் என கருதப்படுகிறது.