தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், பெண்களுக்கு பல்வேறு ஒடுக்கு முறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது, பெண்கள் அழகு நிலையங்களை நடத்துவதற்கு தாலிபான்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். தொடர்ச்சியாக, பல்வேறு உலக அமைப்புகள், தாலிபான்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், தாலிபான்கள் பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வருவது கவனிக்கத்தக்கது.
ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெருமளவு பறிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகிய பணிகளுக்கு மட்டுமே தற்போதைய நிலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாலிபான்களின் இந்த அறிவிப்புக்கு ஆப்கானிஸ்தானில் இயங்கும் பெண்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், இந்த உத்தரவை மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவர் என்று ஆப்கானிஸ்தான் நல்லொழுக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.