வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரஷ்ய அதிபர் புதின் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களிடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அதன்படி இரண்டு நாடுகளில் எந்த நாடு தாக்கப்பட்டாலும் இன்னொரு நாடு உதவுவதற்கு உறுதியளிப்பதாக இந்த ஒப்பந்தத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்ய அதிபர் புதின் வட கொரிய தலைநகர் பியாங்கிய்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ரஷ்யாவுக்கும் வட கொரியாவிற்கும் இடையே அனைத்து அம்சங்களும் உள்ளடக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தினால் பரஸ்பரம் ராணுவ உதவி செய்து கொள்ளும் அம்சம் இடம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் தற்காப்புக்காக ஏற்படுத்தப்பட்டது. எல்லைகளை பாதுகாத்துக் கொள்ளும் வடகொரியாவின் உரிமை இந்த ஒப்பந்தம் மூலம் நிலைநாட்டப்படுகிறது. அதேபோல் வடகொரியாவின் ராணுவ தொழில்நுட்பங்களின் ஒத்துழைப்பை ரஷ்யா ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.