ஆம் ஆத்மி ரூ.163 கோடி திருப்பித்தர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அந்த அரசு, அரசு விளம்பரங்கள் என்ற போர்வையில் கட்சியின் அரசியல் விளம்பரங்களை அரசு செலவில் வெளியிடுவதாக புகார் எழுந்தது. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை, அரசியல் விளம்பரங்களுக்கு டெல்லி அரசின் பணம் ரூ.97 கோடியே 15 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அதற்கு பிந்தைய விளம்பரங்களுக்கு செலவிட்ட தொகையால், இத்தொகை ரூ.99 கோடியே 31 லட்சமாக உயர்ந்தது.
அரசியல் விளம்பரங்களை வெளியிட்டு நஷ்டம் ஏற்படுத்தியதற்காக ஆம் ஆத்மியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்குமாறு கடந்த மாதம் 20-ந்தேதி டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். இதையடுத்து, தகவல் மற்றும் விளம்பர இயக்குனரகம் (டி.ஐ.பி.), ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், அரசியல் விளம்பரங்களுக்கு செலவிட்ட அசல் தொகை ரூ.99 கோடியே 31 லட்சம், அதற்கான வட்டி ரூ.64 கோடியே 31 லட்சம் என மொத்தம் ரூ.163 கோடியே 62 லட்சத்தை டெல்லி அரசுக்கு திருப்பித்தருமாறு கூறப்பட்டுள்ளது. பணத்தை திருப்பித்தர தவறினால் கட்சின் சொத்துக்கள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.