சபரிமலையில் ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர். இதனால் அய்யப்பனை தரிசிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்வதற்காக வருகை தரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவு முறை, உடனடி பதிவு முறை மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் சபரிமலையில் திரண்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் 12 மணி நேரம் காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் நடை திறக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சன்னிதானத்துக்கு வந்து சாமியை தரிசனம் செய்துள்ளனர். ஒரு நாளில் 18 மணி நேரம் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால், தரிசன நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.