தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை ஆன்லைனில் நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை ஆன்லைனில் நடத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சையத் தாஹிர் உசேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ள ஒன்றரை லட்சம் உறுப்பினர்களில் 19 ஆயிரத்து 500 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலில், வாக்காளர்களாக உள்ள அரசு மருத்துவர்களிடம் வாக்குச்சீட்டை பெறும் வேட்பாளர்கள், தங்கள் விருப்பம் போல் அதை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, ஜனவரி 19-ம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அக்டோபர் 19-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.