அடிப்படை ஆதாரம் இல்லாமல் இழிவான கருத்துகள், நேர்காணல்களை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைதான ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை கடந்த முறை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் யூடியூப் சேனல்களில் நேர்காணல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், தமிழக டிஜிபி-யை எதிர்மனுதாராக நியமித்து, அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், இணையதள குற்றங்களை கண்காணிக்கவும் சிறப்பு பிரிவு அமைக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி தரப்பில் எல்காட் எனப்படும் தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் மூலம் 22 கோடியே 64 லட்ச ரூபாய் மதிப்பில் நவீன சைபர் கருவிகளை வாங்குவதற்கான முன்மொழிகளை அரசிடம் சமர்பித்துள்ளதாகவும், உபகரணங்களை வாங்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை ஏற்று வழக்கு விசாரணையை நவம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அரசியலமைப்பு பிரதிநிதிகள், நீதிபதிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு எதிராக அடிப்படை ஆதாரம் இல்லாமல் இழிவாகவும், அவதுறாகவும் கருத்துகளை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.