'ஜி 20' மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, 'ஜி - 20' தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் மாநாடு அடுத்தாண்டு செப்., 9 மற்றும் 10ல் நடக்க உள்ளது. ஜி -20 மாநாடு மற்றும் முன்னேற்பாடு கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், தொழில் அதிபர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அனைத்து மாநில கவர்னர்கள், யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, ''மாநில அரசுகளும், நிர்வாகமும் தங்கள் மாநிலங்களின் முதலீட்டை அதிகரிப்பதற்கு ஜி 20 மாநாட்டை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம்,'' என பிரதமர் பேசினார்.