அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இது தொடர்பாக சோதனைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை தலைமை நீதிபதி கங்கா புருவாளா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இரு தரப்பு வாதத்தையும் கேட்டனர். அதனையடுத்து அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். வெறும் அபராதம் மட்டும் விதிப்பதால் தீர்வு ஏற்படாது. இந்த குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.