பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு நேற்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அந்த நாட்டின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு பதிவு செய்துள்ளது. சுமார் 2000 கோடி மதிப்பிலான ஊழல் முறைகேடு புகாரில் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பிபி, இம்ரான் கான் மனைவியின் தோழி பருகத் ஷாஜாதி மற்றும் இம்ரான் கான் கட்சியின் முக்கிய தலைவர் புகாரி உட்பட எட்டு பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்பாக அல்காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் இரண்டு வார நீதிமன்ற காவலில் இம்ரான் கானை வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இம்ரான் கானிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இம்ரான் கான் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் இன்று விரிவான விசாரணை நடத்த உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி பெற்ற பிறகு இது நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.