தேசிய நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தானில் எக்ஸ் சமூக தளத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விளக்கத்தை பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானில் எக்ஸ் சமூக தள சேவை தடை செய்யப்பட்டது. கடந்த 2 மாதங்களாக பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் எக்ஸ் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இது பற்றி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில், “அரசாங்கத்தின் உத்தரவுகளை எக்ஸ் நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை. எக்ஸ் சமூக தளத்தை பயன்படுத்தி தவறான செய்திகள் வலம் வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட பின்னரும், நிறுவனம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எக்ஸ் தளத்துக்கு தடை விதிக்க நேரிட்டது” என்று பாகிஸ்தான் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு வார காலத்துக்குள் பாகிஸ்தான் அரசு எக்ஸ் தள பயன்பாட்டை கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.