பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலவர வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2023-ல் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பிரதமரும், தெரீக் இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். அப்போது அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராவல்பின்டியில் உள்ள ராணுவ தலைமையகம் உட்பட பல கட்டடங்கள் சேதம் அடைந்தன. கலவரத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தின் போது கலவரத்தை தூண்டியதாக இம்ரான் கான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்துள்ளது. எனினும், அவர் வேறு ஒரு ஊழல் வழக்கில் அடியாலா சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.