செனகல் தலைநகர் டக்காரில் உள்ள விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானது.
மேற்கு ஆப்பிரிக்க நாடு செனகல். இங்கு தலைநகர் டக்காரில் விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டது. அது போயிங் நிறுவனத்திற்கு சொந்தமானது. அந்த விமானத்தில் பயணிகள் உட்பட 85 பேர் இருந்தனர். இந்நிலையில், ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது அந்த விமானம் திடீரென தனது பாதையை விட்டு தாறுமாறாக ஓடியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். பின்னர் சிறிது நேரம் சென்ற விமானம் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து அறிந்து உடனே மீட்புப்படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் பயணிகளை பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றினர். இந்த விபத்தில் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது டக்கார் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.