பாகிஸ்தானில் அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பலங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
பொருளாதார மந்த நிலை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பாகிஸ்தான் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பொது தேர்தல் நடைபெற்றது. அதன்படி பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பேசுகையில், நாம் நமக்குள் சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வறுமையை ஒழிக்க பாடுபட வேண்டும். சர்வதேச நாணய நிதி அமைப்பை சார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும். பிற நட்பு நாடுகளிடம் இனி கடன் பெறக் கூடாது. அதற்கு பதில் அவர்களை நம் நாட்டில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். வெளிநாட்டு கடன்களில் இருந்து பாகிஸ்தானை மீட்க வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளேன் என்று கூறினார்.
அதோடு வீண் செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பலங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இனிமேல் மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகின்ற போது இது பயன்படுத்தப்படாது. பிரதமர் ஷெரிபின் உத்தரவின்படி இந்த தடை அமலுக்கு வருகிறது என்று மந்திரி சபை கூறியுள்ளது. எனினும், வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.