ஆதார் எண் இணைக்கப்படாத பான் எண் செல்லாததாகி விடும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆதார் மற்றும் பான் எண்களை இணைப்பது வருமானவரித் துறைக்கு அவசியமானது. ஏனெனில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் போலியான பான் எண்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மற்றும் வரி இணக்கத்தை மேம்படுத்துவது சாத்தியமாகும். மேலும், தற்போதைய சூழலில் பான் எண்ணானது வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல், அவற்றில் பணத்தை டெபாசிட் செய்தல், டீமேட் கணக்குகளைத் தொடங்குதல், சொத்து வாங்குதல் மற்றும் விற்றல் போன்ற பல்வேறு நிதி சார்ந்த செயல்பாடுகளைச் செய்வதற்குத் தேவையானதாக உள்ளது.
இந்நிலையில், வருமான வரிச் சட்டம் 1961-ன்படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் எண் வைத்திருப்பவர்களும், வரும் 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் தங்களது பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகும். இது தொடர்பாக வருமான வரித் துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``2023 மார்ச் 31-ம் தேதிக்குள் தங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 2023 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு, இணைக்கப்படாத பான் எண் செயலிழந்துவிடும். எனவே, காலம் தாமதிக்காமல் இன்றே இணைக்க வேண்டும்'' எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.