தென் அமெரிக்கா நாடான பெருவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பெருவில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இந்த ஆண்டின் முதல் ஏழு வார காலத்தில் சுமார் 31,000 பேருக்கு டெங்கு உள்ளது கண்டறியப்பட்டது. இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதை அடுத்து அங்கு உள்ள 24 மாகாணங்களில் 20-ல் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். கடந்த ஆண்டு டெங்கு பாதிப்பு காரணமாக அந்நாட்டின் சுகாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. அப்போது சுமார் 18 பேர் பலியாகினர். நிகழாண்டில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு டெங்கு பரவலுக்கு அதிக மழை மற்றும் வெப்பம் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.