பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சிக்கிஜர் மாகாணத்தில் இருந்து பொஹோல் மாகாணத்திற்கு படகுப் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று 65 பயணிகள் மற்றும் 55 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த படகில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக, உயிர் சேதங்கள் ஏதும் இன்றி, படகில் பயணித்துக் கொண்டிருந்த 120 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
படகில் தீ விபத்து நேர்ந்த உடன், உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் படையினர், படகில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர். மேலும், 2 கப்பல்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அனைத்தனர். கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.