போன் பே நிறுவனம் ‘பின்கோடு’ என்ற பெயரில் புதிய ஷாப்பிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது இந்திய அரசின் இணைய வர்த்தகத் தளமான ஒஎன்டிசி யில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், பெங்களூரு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இதன் சேவைகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பின்கோடு செயலி மூலம், உள்ளூர் கடைகள் மற்றும் விற்பனையாளர்களை டிஜிட்டல் முறையில் இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் இருக்கும் விற்பனையகங்களில் ஆப்லைன் முறையில் வாங்குவதை இனிமேல் ஆன்லைன் முறையில் வாங்க முடியும் என கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த சேவை இந்தியாவின் பிற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய போன் பே நிறுவனத்தின் தோற்றுநர் சமீர் நிகாம், “அடுத்த சில வருடங்களுக்கு, இந்திய வியாபாரிகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் இணைப்பதை நோக்கி பின்கோடு செயல்படும்” என கூறியுள்ளார்.