குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகிக்கும் திட்டம், தமிழகத்தில் இன்னும் 18 மாதங்களில் தொடங்கப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய ஐஓசி நிறுவனத்தின் தமிழக - புதுச்சேரி மாநிலங்கள் செயல் இயக்குனர் வி.சி. அசோகன், “குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்காக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், 2046 ஆம் ஆண்டிற்குள், புகையில்லா நிலையை எட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், வரும் 2025 ஆம் ஆண்டுக்குள், 20% எத்தனால் கலந்த பெட்ரோலிய விற்பனை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எக்ஸ்பி 100 என்ற பெயரில், 100 ஆக்டேன் தரம் கொண்ட எரிபொருளை ஐஓசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது, தற்போது, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, ஊட்டியில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில், மதுரை, கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரியில் அறிமுகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.