அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேத்திர மோடி சூட்டுகிறார்.
நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினமான ஜனவரி 23 பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தினம் டெல்லியில் கொண்டாடப்பட உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு பெயர் சூட்ட இருக்கிறார்.
2018 ஜனவரி வரை 21 பேர் பரம் வீர் சக்ரா விருதினை பெற்றுள்ளனர். 20 பேர் இந்திய ராணுவத்தில் இருந்தும் ஒருவர் இந்திய விமானப்படையில் இருந்தும் இந்த விருதினை பெற்றுள்ளனர். 21 தீவுகளில் அளவில் மிகப் பெரிய தீவுக்கு முதல் பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றவரின் பெயர் வைக்கப்படும் என்றும், அடுத்தடுத்த அளவுள்ள தீவுகளுக்கு அடுத்தடுத்து பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.