எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதன் எதிரொலியாக சென்னை முழுவதும் உள்ள பெரியார், அண்ணா உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள அண்ணாவின் முழுஉருவச் சிலை அண்மையில் அவமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கும்படி காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையின் மூக்கு பகுதி சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் தேனாம்பேட்டை சம்பவ இட த்தில் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை முழுவதும் உள்ள சுமார் 60 பெரியார், அண்ணா சிலைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளுக்கு முழு அளவில் பாதுகாப்பு வழங்கக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து அண்ணா சாலையில் உள்ள பெரியார், அண்ணா சிலைகள் உட்பட அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.