25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் போலியோ நோயை பதிவு செய்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
காசாமுனை மீது இஸ்ரேல் போர் செய்து வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். போர் காரணமாக மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் தடுப்பூசி பெற முடியாமல் அவதியுறுகின்றனர். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது காசாவில் போலியோ பாதிப்பு பதிவாகியுள்ளது. மத்திய காசா பகுதியில் தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தைக்கு போலியோ நோய் இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கடந்த ஜூன் மாதம் கழிவுநீரில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் போலியோ வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஒரு குழந்தைக்கு போலியோ அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து ஜோர்டான் தலைநகர் அம்மானில் சோதனைகள் நடத்தப்பட்டது. அதில் தொற்று உறுதியாகி உள்ளது என்றனர். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக இஸ்ரேல் போர் இடை நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா தலைவர் அந்தோனியோ குட்டேரஸ் அழைப்பு விடுத்திருந்தார்.