வரும் பிப்ரவரி 18, 19 ஆம் தேதிகளில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகிறார். தில்லியில் இருந்து தனி விமானம் மூலம், பிப்ரவரி 18ஆம் தேதி காலை 11:50 மணிக்கு, அவர் மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். அதைத் தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு மேல், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். அதற்குப்பின், ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள கோவை செல்கிறார். இறுதியாக, பிப்ரவரி 19ஆம் தேதி கோவையிலிருந்து டெல்லிக்கு திரும்புகிறார்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் பகுதியாக, பிப்ரவரி 18, 19ஆம் தேதிகளில் மதுரையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.