பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் 48 ஆயிரம் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
பி.எம்.இ.ஜி.பி., எனும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பான ஒரு நாள் பயிலரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. பயிலரங்கை துவக்கி வைத்து துணை தலைமை செயல் அதிகாரி ராஜன்பாபு பேசுகையில், பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் பாரம்பரிய தொழில் துறையை கவனத்தில் வைத்து உருவாக்கப்பட்டது.
கடந்த 2008 முதல் 2022 மார்ச் வரை இந்த திட்டத்தின் வாயிலாக 7.82 லட்சம் தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 48 ஆயிரத்து 220 நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதுவரை 64 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4.82 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதுவரை 51 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டு உள்ளது.
நீலகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பின்னடைவில் உள்ளன. இதர மாநிலங்களை விட இந்த திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.