அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக கடந்த வாரம் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வெளியே நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஆதரவு போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நியூயார்க் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மிக்ஸிகன் பல்கலைக்கழகம் மற்றும் மசுச்சஸ்சட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் போன்றவற்றிலும் போராட்டங்கள் வெடித்தன. மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நியூயார்க் பல்கலைக்கழக நிர்வாகிகள் அவர்களை அந்த இடத்தை விட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்ததால் நேற்றிரவு எட்டு மணி அளவில் அவர்களை கும்பலாக போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக மாணவர்களிடையே தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மாணவர்கள் ஒரு புறமும் யூதர்களுக்கு ஆதரவாக சில மாணவர்களும் போராடி வருகின்றனர். நேற்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மிகுந்த பதற்றம் நிலவியது. மாணவர்கள் அனைவரும் இணையம் வாயிலாக கல்வி கற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அடையாள அட்டையின்றி எவரையும் இனி உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.