சென்னையில் 2-வது கட்டமாக நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணியில் 3-வது பணிமனையை சிறுசேரியில் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் சேவை முதல் கட்டத்தில் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடியில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 128 இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள், பாதைகள் மற்றும் பணிமனைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4-வது வழித்தடமும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் 2-வது கட்டத்தில் அமைக்கப்படும் ரெயில் பாதைகளில் 3 பெட்டிகளை கொண்ட 138 டிரைவர்கள் இல்லாத ரெயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படவிருப்பதால் தலா 3 வழித்தடத்துக்கும் 3 பணிமனைகள் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி சிறுசேரியில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.