அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்திருப்பவர்கள் தவணை முறையில் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 2022-23ம் நிதியாண்டில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் சொத்து வரி செலுத்தி உள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சொத்து வரியை அதன் உரிமையாளர்கள் ஒவ்வொரு அரையாண்டுகளின் தொடக்கத்தில் முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சொத்துவரி வசூல் ரூ.1500 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சொத்து வரி உயர்த்தப்பட்டதால் வட்டி இல்லாமல் 2ம் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்த ஜனவரி 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி, சொத்து உரிமையாளர்கள் எளிதில் சொத்து வரியினை செலுத்தும் வகையில், தங்களது இல்லம் தேடி வரும் தபால் துறை ஊழியர்கள், வரி வசூலிப்பாளர்களிடம் காசோலை, வரைவோலை, கடன் மற்றும் பற்று அட்டைகள், இ-சேவை மையங்கள், சென்னை மாநகராட்சி இணையதளம், பே.டி.எம்., நம்ம சென்னை ஆகிய செல்போன் செயலிகள் மூலம் பரிமாற்ற கட்டணம் இல்லாமல் செலுத்தலாம்.
மேலும், தவணை முறை அடிப்படையிலும் சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. தவணை முறை திட்டத்தை எச்.டி.எப்.சி. வங்கியுடன் இணைந்து சென்னை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது. ரூ.6 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பவர்கள் தவணை முறையை பயன்படுத்தி வரி செலுத்த முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.