வேற்று நாடுகளைச் சேர்ந்த 75 பேருக்கு ரஷ்யா குடியுரிமை ஆணையை வழங்கி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் இதனை உறுதி செய்துள்ளார். குடியுரிமை வழங்கப்பட்டோர் பட்டியலில், அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய எட்வர்ட் ஸ்னோடனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, பிற நாடுகளின் அரசாங்க செயல்பாடுகள் மற்றும் அமெரிக்க மக்களின் செயல்பாடுகள் போன்றவற்றை ரகசியமாக கண்காணித்து வந்ததாக கூறப்பட்டது. இதனை, எட்வர்ட் ஸ்னோடன் என்ற அமெரிக்க நபர் பகிரங்கமாக அறிவித்தார். மேலும், அமெரிக்கா, பல உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்தது உறுதியானது. இதனால், அமெரிக்கா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியது. எனவே, எட்வர்ட் ஸ்னோடனை, தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. அவருக்கு தீவிரமான தண்டனை வழங்கிட அமெரிக்கா முடிவு செய்திருந்த நிலையில், அவர் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். ரஷ்யாவில் தஞ்சமடைந்த அவரை, தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கோரி இருந்தது. அமெரிக்காவின் கோரிக்கையை ரஷ்யா தொடர்ந்து நிராகரித்து வந்தது. இந்நிலையில், எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்யாவின் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இனிமேல், அமெரிக்கா அவரை தண்டிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது.