ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வல்டாய் டிஸ்கஷன் கிளப் நடத்திய வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பொழுது, இந்திய நாட்டிற்கும், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு கொள்கையால் இந்தியா முன்னேறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் இந்தியா குறித்து பேசியதாவது: “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தேசபக்தர். அவருடைய ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பொருளாதார ரீதியாகவும், கொள்கை அடிப்படையிலும் சிறப்பான திட்டமாகும். இது இந்தியாவை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்கிறது. எனவே, இனி வரும் காலம் இந்தியாவின் வசம் உள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமிதம் கொள்ளலாம். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, பிரம்மாண்டமான வளர்ச்சியை இந்தியா எட்டியுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை அடிப்படையில் ஒரு பெரிய நாடு, இத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளது அந்நாட்டின் மீது மரியாதையையும் ஈர்ப்பையும் அதிகரிக்கிறது. பன்னெடுங்காலமாக, இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. எங்கள் பலமான உறவு காரணமாக, எங்களுக்குள் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டதில்லை. எதிர்காலத்திலும் எங்கள் உறவு தொடர்ந்து நீடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமரின் கோரிக்கை படி, 7.6% கூடுதலாக ரஷ்ய உரங்களை இந்தியாவுக்கு வழங்க உள்ளதாக கூறினார். இதன் மூலம், விவசாயம் தொடர்பான இருநாட்டு வர்த்தகம் இரட்டிப்பாக உயரும் என தெரிவித்தார். மேலும், ஒரே இலக்கை நோக்கி உலகம் பயணித்தால் மட்டுமே எதிர்கால சவால்களை சமாளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், மேற்கத்திய நாடுகளை தனது உரையில் கடுமையாக சாடியுள்ளார். அவர்களது செயல்பாடுகள் மோசமாகவும் தரமற்றதாகவும் உள்ளதாக கூறியுள்ளார். மேற்கத்திய நாடுகள் பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி வருவது விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.