ஹிந்துஜா குழுமத்தின் அங்கமாக இண்டஸ்இண்ட் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், இண்டஸ்இண்ட் வங்கியில் தனது பங்கு மதிப்பை 26% ஆக உயர்த்த திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், பங்கு மதிப்பை உயர்த்துவதற்கான அனுமதியை மத்திய ரிசர்வ் வங்கி தற்போது வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பங்கு மதிப்பு உயர்வதால், ஹிந்துஜா குழுமம், 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வங்கியில் முதலீடு செய்யலாம் என்று கருதப்படுகிறது. ஹிந்துஜா குழுமம், இண்டஸ்இண்ட் வங்கி பங்குகளை உயர்த்த 1.2 - 1.3 பில்லியன் டாலர்கள் தொகையை முதலீடு செய்ய வேண்டி இருக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி, இண்டஸ்இண்ட் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 12.58% பங்குகளையும், இண்டஸ்இண்ட் லிமிடெட் நிறுவனம் 3.92% பங்குகளையும் பெற்றிருந்தன. தற்போது, பங்கு மதிப்பு உயர்வு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், ஹிந்துஜா குழுமம் மற்றும் இன்டஸ்இண்ட் வங்கி ஆகியவை இது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடவில்லை.